நினைவுக்காற்றாடியைச் சுழற்றினால் அவிழ்ந்து விழுகிறது அடிமனசில் குவிந்திருந்த அர்ச்சனைப் பூக்களின் மகரந்தம். ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஆர்.ஆர். தியேட்டர் என்ற ஒரு ஒலிப்பதிவுக் கூடம் உண்டு.
அங்கே பலநூறு கலைஞர்களின் பல்லாயிரக்கணக்கான அற்புத படைப்புகள் வெளியாகி உள்ளன. அங்கே இசையமைப்பாளர் எஸ்.ஏ. இராஜ்குமார் அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது, ஆனந்தம் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் லிங்குசாமி அவர்கள் எதிர்ப்பட்டார். ஆனந்தம் திரைப்படத்திலே நான் ஒரு பாடலை எழுதியிருந்தேன்.
அந்த நட்பின் தொடர்போடு அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, தன்னோடு நின்று கொண்டிருந்த ஒல்லியான தேகத்தோடு தோற்றமளித்த ஒரு நபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் லிங்குசாமி. இவர்தான் யுகபாரதி! இந்தப்படத்தில் பாடல் எழுதி அறிமுகம் ஆகிறார். இவர் எழுதியிருக்கிற பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்கிற பாடல் மிக அழகான கவிதையாய் வந்திருக்கிறது என்று கூறினார். அவரோடு கைகுலுக்கியவாறு. என்ன வரிகள் என்று கேட்டேன். ஒரு ரூபாய் நாணயத்தை வரமாக காதலியிடம் இருந்து பெற்ற காதலன். அந்த தேவதையின் பிரசாதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு , உயிரோடு கலந்து பாடுகின்ற அப்பாடலின் வரிகளை வாசித்துக் காட்டினார் யுகபாரதி! சிலாகிக்கும்படி அவ்வளவு அழகு அதில் பொங்கி வழிந்தது. அந்த காலகட்டத்திலே, எல்லா பாடலாசிரியர்களுமே ஏதோவொரு பிரம்மாதமான பிரவேசத்தோடுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் என்னுடைய அபிமான இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களின் இசையில் தில் திரைப்படத்திலே மூன்றுநான்கு பாடல்கள் எழுதியிருந்தேன். ஓ.. நண்பனே.. நண்பனே..! தில்... தில்.. போன்ற வெற்றிப்பாடல்கள் அதில் அடக்கம்.
அந்த திரைப்படத்திலே மற்றொரு அழகான கவிதைநயமிகு பாடல் கவிஞர் கபிலன் எழுதியது. மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு போகிற ஒரு பாமரனின் உதட்டிலும் கவிதையை உட்கார வைத்த ஒரு பாட்டு! உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?என்கிற பாடல். கபிலனுக்கு ஒரு அடையாளத்தைத் தந்தது.
அதேசமயத்தில் திரையயங்கிலும் இருந்து நல்ல நல்ல அடையாளங்களுடன் பாடலாசிரியர்கள் அணிவகுத்துப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இசையமைப்பாளர் வித்யாசாகரைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய கவிதைப் பிரியர். அவரது இசை சபையில் ஆஸ்தானமாக ஐந்து பாடலாசிரியர்கள் எப்போதுமே பாடல் எழுதிக் கொண்டிருப்பார்கள். நான், அண்ணன் அறிவுமதி, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி போன்றோர் எல்லாப் படங்களிலும் பாடல்கள் எழுதிக் கொண்டிருப்போம். இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுக்கு ஒரு வித்தியாச குணம் உண்டு. மெட்டுக்களுக்குப் பாடல் எழுதித்தர கேட்காமல், பாட்டு வரிகளை முன்கூட்டியே வாங்கி அவற்றை பதமாய் இதமாய் கோர்த்து இசையமைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
என்னுடைய ஏராளமான பாடல்களுக்கு அவர் இசை கோர்த்து பெரும் புகழ் தந்திருக்கிறார். அவர் இசையோடு கைகோர்த்த பலநூறு பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. என்னுடைய நெஞ்சின் ஆழத்தில் நினைவு கோப்பையில் ததும்பி நிற்கும் நானெழுதிய கோப்பைகளில், அடிமனதில் எப்போதும் சுழன்று கொண்டிருக்கும், என் ஆத்ம இசைத்தட்டிலே பதிவாகியுள்ள பாடல்களில் இந்தப் பாடலும் அடக்கம்.
ஜி என்கிற திரைப்படத்திற்காக இயக்குநர் லிங்குசாமி அவர்களைச் சந்தித்து பாடல் எழுதுவதற்கான வாய்ப்பினை நான் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் பதிவாகி முடிந்து இறுதியாக ஒரேயயாரு பாடல் மட்டும் பதிவு செய்யப்படாமல் இருந்த நிலை!
அந்தப் பாடலையும் வேறொரு பாடலாசிரியருக்குத் தருவதாய் உத்திரவாதம் அளித்துவிட்டதன் பெயரில் லிங்குசாமி அவர்கள் தன்னிலையை எனக்கு விளக்கிக் கூறினார்.
அச்சூழலை புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், உள்ளே ஒளிந்து கொண்டிருந்த ஆர்வத்தை என்னால் விலக்கி வைக்க இயலவில்லை. விருப்பமில்லாமல் விடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தேன். நாட்கள் நீண்டு கொண்டிருந்தன. மீண்டும் ஒருமுறை இயக்குநர் லிங்குசாமி அவர்கள் அழைத்தார்.
இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் உங்களுக்காகவே இந்த மெட்டை பிரத்யோகமாக இசைத்துள்ளார் என்று கூறி, இதை உங்களையே எழுதச் சொல்லி விடாப்பிடியாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனால் நான் தருவதாகச் சொன்ன வேறொரு பாடலாசிரியருக்கான வாய்ப்பை அடுத்த படத்திலே தந்து கொள்கிறேன். நீங்கள் இநதப் பாடலை எழுதித் தாருங்கள் என்று என்னிடம் இசைப்பேழையினை வழங்க. இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் என்மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும், அன்பையும் எண்ணிக்கொண்டேன். மெட்டினை பெற்றுக் கொண்டேன். தொடர்ச்சியாக. அந்தப்பாடல் எழுதப்பெற்று ஜி திரைப்படத்திலே வெளிவானது. எனக்கு மிகமிக பிடித்த பாடலும், அடிக்கடி விரும்பி கேட்கின்ற பாடலும் அதுவாகவே மாறிப் போனது. டிங் டாங் கோயில் மணி என்கிற பாடல்தான் அது! புல் தூங்கும் பூவும் தூங்கும் புதுக்காற்றும் தூங்கும் தூங்காது நம் கண்கள்தான்; ஏங்காதே அது காதல்தான்! என்பன போன்ற மிக இயல்பான புதுக்கவிதையின் தீர்த்தம் அந்தப் பாடலிலே அள்ளி இறைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடல் எழுதிய பிறகு இயக்குநர் லிங்குசாமிக்கும் எனக்குமான நட்பு இன்னும் அதிகப்பட்டது. அதைத் தொடர்ந்து தன்னுடைய அனைத்துப் படங்களிலும் பாடல்களை எனக்குத் தரத் தொடங்கினார். சண்டைக்கோழி திரைப்படத்திலும் பாடல்களை எழுதினேன். இயக்குநர் லிங்குசாமி அவர்களின் கதைவிவாத அறைக்குள் நுழைந்தாலே ஏதோ கவிதை சபைக்குள் நுழைந்தது மாதிரி இருக்கும். அறையின் வாசலிலேயே ஒரு கரும்பலகை வைத்திருப்பார்.
அதில் அலுவலகத்தில் வேலை செய்கிற யாராக இருந்தாலும், அது தேநீர் கொடுக்கிற நபராக இருந்தாலும் சரி. இல்லை அலுவலக மேலாளராக இருந்தாலும் சரி.. அல்லது உதவிஇணை இயக்குநராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு கவிதை எழுதி வைப்பார்கள். அப்போது இயக்குநர் லிங்குசாமி தீபாவளி என்கிற திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்த திரைப்படத்திலே எனக்கு பாடல் எழுத மெட்டு எதுவும் வழங்கப்படவில்லை. மாதங்கள் ஓடிக்கொண்டே இருந்தன.
தீபாவளி திரைப்படம் வெளியாகும் நாளும் வந்தது. தீபாவளி திரைப்படம் வெளியான போது அவருடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரின் சுற்றத்தார்களுக்கு ஒரு புது சட்டை வாங்கி பரிசளித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு சட்டையானது என்னுடைய இல்லத்திற்கும் வந்தது.
சட்டையை வாங்கிப் பார்த்த எனக்கு, அவருக்கு பதில் கடிதம் எழுதி அனுப்ப வேண்டுமென்று தோன்றியது. அக்கடிதத்தில் நான் இவ்வாறே எழுதி இருந்தேன். சட்டையை அனுப்பினீர் சந்தோம்! ஆனால் எனை சட்டை செய்யவில்லை என நினைத்திட்டேன்; அச்சட்டை அதிகம் பிடித்தது; அடுத்த ஓர் திரைப்படத்தில் பதிகம் தந்தால் பரிவு என்று வெண்பா நடையிலே ஓர் கவிதையாய் எழுதி அவருக்கு அனுப்பி இருந்தேன். சிரித்துக் கொண்டே என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இல்லை.. தீபாவளி திரைப்படத்தை தயாரித்தது மட்டும்தான் நான். இயக்குநர் எழில்தான் மற்றவற்றை முடிவு செய்தார்.
நிச்சயம் அடுத்த திரைப்படத்தில் சந்திப்போம் என்று உறுதியுடன் கூறி, பீமா திரைப்படத்திலே அந்த உறுதியை நிறைவு செய்து இரண்டு பாடல்கள் வழங்கினார்.
இப்படி ஏராளமான சின்னச் சின்ன அன்பின் அதீத உணர்வுகள் எங்கள் துறைக்குள்ளே ஒவ்வொரு வருக்குள்ளும் மாறி மாறி நெகிழ்ந்து போவதுண்டு. ஜி படத்தில் எனக்கு மிகமிக பிடித்த டிங்டாங் கோயில்மணி என்கிற பாடலை இயக்குநர் லிங்குசாமி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
|